Monday, August 17, 2009

கடுக்காகாடு அங்கன்வாடி மையம் சீரமைக்கப்படுமா?

First Published : 16 Aug 2009 11:50:42 AM IST


ஆலங்குடி, ஆக. 14: ஆலங்குடி அருகேயுள்ள முள்ளங்குறிச்சி ஊராட்சி, கடுக்காகாடு கிராமத்தில் முற்றிலும் பழுதடைந்துள்ள நிலையில் இருக்கும் அங்கன்வாடியைச் சீரமைக்க என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சுமார் 50 ஆண்டுகளாகச் செயல்படும் இந்த அங்கன்வாடி மையத்தில் சுமார் 40 குழந்தைகள் பயில்கின்றனர். இங்குள்ள கட்டடத்தின் சுவர், மேற்கூரை, கதவு மற்றும் ஜன்னல் என்று கட்டடத்தின் அனைத்து பாகங்களும் சேதமடைந்துள்ளன. எந்த நேரத்திலும் ஆபத்து நேரிடலாம் என்ற சூழல் உள்ளது.

இதனால், குழந்தைகளும் பெற்றோர்களும் அச்சத்தில் உள்ளனர். இதைச் சீரமைக்க வேண்டும் என்று பலமுறை கறம்பக்குடி ஒன்றிய அலுவலர்களிடம் பொதுமக்கள் முறையிட்டும் பலனில்லை.

கடந்த ஆண்டு கோட்டைக்காட்டில் நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் அங்கன்வாடி கட்டத்தை ஆய்வு செய்துவிட்டு இக்கட்டத்தைச் சீரமைக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கிருந்த அலுவலர்களிடம் உத்தரவிட்டார். அதற்குப் பின்னரும்கூட எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இக்கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். மேலும், இப்பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ளாத கறம்பக்குடி ஒன்றிய நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தவும் முடிவெடுத்துள்ளனர்

No comments:

Post a Comment